Monday 14 November 2011

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக மாற்றம், பரமக்குடி தலித் படுகொலைகள் - எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் கண்டன ஆர்பாட்டம்

 
 
அன்புடையீர்,

அறிவுலகத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் தருணம் இது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசின் அறிவிப்பு நம் மனங்களில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கும் நிலையில், கொழுந்து விட்டு எரியும் அந்தத் தீயை அணைக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? நம் எதிர்ப்பை தெரிவிக்க ஆங்காங்கே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நம் கருத்துக்களை எடுத்து வைத்தாலும், நாம் ஒன்று கூடி நமக்கு நேர்ந்த இந்த அவமானத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது கடமையல்லவா?

தமிழக அரசு தலித்துகளின் உயிரை கிள்ளுக்கீரையாய் நினைத்து பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலியானோர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே வழங்கி, தலித்துகளின் உயிரை மலிவெனக் கருதுவதை வெளிப்படுத்தியது. கண் துடைப்பு விசாரணை கமிஷன் ஒன்றை நிறுவியிருக்கும் தமிழக அரசின் செயல், பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல். தவறு செய்பவரும், தண்டிப்பவரும் ஒருவரேயெனில் நியாயமும் நீதியும் எப்பக்கம் செல்லும் என்பது திண்ணம். ஆகவே, சி.பி.ஐ விசாரணை கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரக் கோரியும் எழுத்தாளர்களாகிய நாம் ஒடுக்கப்ப்ட்ட மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகவும், அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. நவம்பர் 20, ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திரள்வோம் நண்பர்களே! நம் எதிர்ப்பை தெருவில் இறங்கி முழங்குவோம். தமிழ்நாடெங்கிலும் இருந்து தங்கள் கடமையெனக் கருதி நண்பர்கள் புறப்பட்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறோம். தனிநபராகவோ, தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பிலோ எப்படியாயினும், தங்கள் பங்கேற்பு இன்றியமையாதது!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒலிக்கப் போகும் நம் கண்டனக் குரல்கள் அறிவுலகின் மீது விடப்பட்டுள்ள சவாலின் எதிர்வினை.

நம் எதிர்ப்புக் குரலின் வலிமையில் கோட்டைக் கதவுகள் திறந்து கொள்ளட்டும்!

சென்னை நோக்கி அணிவகுத்து வாருங்கள்!

நண்பர்கள் இதை உங்கள் முகநூல் பக்கத்திலும் வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.

இப்படிக்கு

எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப், வ.கீதா, பிரின்ஸ் கஜேந்திர பாபு, எஸ்.எஸ்.ராஜகோபாலன், அழகிய பெரியவன், அரங்க மல்லிகா, சந்திரா, தி.பரமேஸ்வரி, கம்பீரன், விஷ்ணுபுரம் சரவணன்,கவின் மலர்
தொடர்புக்கு : 98411 55371, 93603 33336, 94437 54443

No comments:

Post a Comment